Dienstag, 13. November 2007

ஜமாலனின் - அறிவு மற்றும் உணர்வு பற்றிய சில எடுகோள்கள் - மீதான கேள்விகள்

உடல்தேடி அலையும் ஆதாம்களும், ஏவாள்களும் - அறிவு மற்றும் உணர்வு பற்றிய சில எடுகோள்கள்.

//
7. உயிர் என்பது ஒரு வேதிவினை. உடல் என்பது இவ்வினை நடைபெறுவதற்கான களம். உயிர்த்தலுக்கான வேதிமம் என்பது ஒருவருக்கு வாழ்வதற்கான மகிழ்வின் உணர்ச்சிகளை உருவாக்கும் புரதங்கள் (புரோட்டின்) ஆகும். உடல் 20 வகை புரதக் கூட்டுகளால்தான் உயிர் வாழ்கிறது. அதனால்தான் புரத அமிலங்களை உயிர்ம அமிலம் என்கிறோம். எனவே, உணர்ச்சிகள் என்பது ஒருவகை புரத அமிலங்களின் வினைபாடுகளே, அவ் அமிலங்கள் உருவாக்கும் வினையின் ஆற்றலே மூளையில் கட்டளைகளை உருவாக்கி நரம்புகளுக்கு செய்திகளை அனுப்புகிறது, அச்செய்திகளை பெற்ற நரம்புகள் ஒன்றை ஒன்று ஊடுறுவி ஏற்படுத்தும் முடிச்சுகளின் அமைப்பும், விளைவுமே நாம் பெறும் உணர்வுகள் ஆகும்.
//

விலங்குகளின் உணர்வுகள் வெறும் வேதிவினைகளே என்று கூறுகிறீர்கள். நம் உடல் ஒரு வேதியியல் சாலை என்றால், இந்த வேதிப்பொருட்கள் புரியும் வேதிவினைகளுக்கு ஏன் கவலைப்படுகிறீர்கள்
அதாவது ஒருவன் துயரமடைவதாக கருதுவதற்கும், சந்தோஷப்படுவதாக கருதுவதும், ஒரு பரிசோதனை குழாயில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏதோ தனிமத்துடன் புரியும் வேதிவினை போன்றது என்றால் இதற்கு ஏன் உரிமை, மஞ்சுமெத்தையில் இருக்கும் வேதிவினை, கட்டாந்தரையில் இருக்கும் வேதிவினை என்று கவலைப்பட வேண்டும்? யாரேனும் பரிசோதனைக்குழாயில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துக்கோ அல்லது வேறேதும் புரத அமிலத்துக்கோ வேதிவினை புரிய சரியான தனிமம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவார்களா?

//8. இந் நரம்புகளின் முடிச்சு கலைந்து விலகி பழைய நிலையை ஏற்படுத்தும்வரை நரம்புகள் இயக்கமற்றும் அல்லது ஒரேவகை இயக்கத்தை மட்டுமே கடத்தும் செயலை செய்வதால், நாம் தொடர்ந்து ஒரேவகை உணர்விற்கு ஆட்படுகிறோம். இதுவே நம்மால் புரிந்து கொள்ள முடியாததாக உணாவுகள் இருப்பதன் மர்மம். உணர்விற்கு ஆட்படும்போது நரம்புகளில் ஏற்படும் முடிச்சுகளால் மூளையின் செய்தி வினைகள் தடைப்படுவதால், மூளை அந்நேரத்தில் உடலின் இயக்கத்தை பதியவைக்க முடிவதில்லை. அத்துடன் மூளையில் ஏற்படும் அதீத ஆற்றலின் விளைவால் அதன் செயல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, உணர்வுகளுக்கு ஆட்பட்டவர், உணர்வுகளில் இருந்து விடுபட்டவுடன் சற்று குழப்பமான நிலையிலும், தனக்கு ஏற்பட்ட உணர்வுகளின் சுவடை மட்டுமே உணர்ந்தவனாய், அவ்வுணர்வுகளை மீளவும் நினைவு படுத்த முடியாதவனாய் இருக்கிறான்.//


ஆகவே கம்யூனிஸ சமூகத்தில் எல்லோரும் ஒரே விதமான வேதிவினைகளே கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று இருக்குமா? வேறு வேதிவினைகள் நடந்துவிட்டால் அவர்கள் என்ன செய்யப்படுவார்கள்? மனிதர்களில் உடல்கள் கருத்துக்கள் எண்ணங்கள் ஆகியவைவெறும் வேதிவினைகளே என்பதால் அவர்கள் தீர்த்துக்கட்டப்பட்டால், அது சரியாக மற்ற வேதிவினைகளால் (மனிதர்களால்) புரிந்துகொள்ளப்படுமா?


//9. தோடர்ந்து ஒரேவகை உணர்விற்கு பழக்கப்பட்ட ஒருவரது நரம்பு மண்டலம், அவ்வகை உணர்விற்கான வினைகளை எளிமையாகவும், சுலபமாகவும் ஏற்கிறது. அவ்வுணர்விற்கான தூண்டல் காரணிகளையும் பழக்கப்படுத்திக் கொள்கிறது. காதலிப்பவரை பார்ப்பதும், அவர் பற்றி நினைப்பதும் காதல் உணர்வை தூண்டும் காரணியாக இருந்தால், அவர் சம்பந்தப்பட்ட எல்லாம் ஒருவகை வினைதூண்டும் திறப்பு செய்தியாக அல்லது அமிலமாக உடலில் சேகரமாகிறது. (காதலுக்கு 'அடிர்னிலின்' மற்றும் கிளைக்கோஜன்' - என்கிற இரு வேதிமங்கள் தேவை என்கிறது 'Cybernetics Msdely' என்கிற நூல்.) அவர் குறித்த நினைவே மகிழ்விற்கான அமிலத்தை சுரக்கிறது, இதையே காதலுக்கான வேதிவினையின் முதல்படியாக கொள்ளலாம்.//


ஆக காதல் பற்றிய கவிதைகளும் திரைப்படங்களும் வேதிவினைகளின் விளைவுகளே என்று கூறுகிறீர்கள். அதே போல உரிமைக்கும் ஏதேனும் வேதிவினை இருக்கிறதா?


//10. மனித இருத்தல் எப்பொழுதும் சாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது, தனது மரணம் பற்றிய பயமே மனிதனை கூட்டிணைவை தேடும் ஒரு சமூக மிருகமாக வைத்திருக்கிறது. இவ் இணைவின் அடிப்படையெ, தனது இனத்தை பெருக்குவதின் அவசியத்தையும், அதாவது இன வலிமையை உருவாக்க வேண்டிய தேவையையும் உருவாக்குகிறது. தனது மனதின் கட்டமைப்பில் செறிந்துள்ள (அல்லது கட்டமைப்பை உருவாக்கிய முக்கிய காரணியில் ஒன்றான மரண பயத்தின் மனோவியல் வன்முறையிலிருந்து தப்ப மனதை பிறருடன் வினைப்படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது. இனவலிமையை பெருக்கும் ஒரு சடங்காக திருமணமும் (அதனால்தான் இதனை வளமை பெருக்க சடங்கு என்கிறார்கள்), மனோவியல் வன்முறையை பகிர்வதன் மூலம் அதன் அழுத்தத்திலிருந்து தப்பும் ஒரு செயலாக காதலும் உருவான பிண்ணனியை இவ்வாறாக யூகிக்க முடிகிறது.//


ஆகவே, சாவு என்பது இல்லாமல் போனால், சமூகமும் அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள். சமூகம் இருந்தால் அதன் விதிகளோடு ஒத்துப்போக வேண்டிவரும். ஆகவே கம்யூனிஸ சமூகத்தில் சாவு என்பது இல்லாமல் ஆகிவிடும் என்று புரிந்துகொள்ளலாமா?

//11.காதல் என்பது நம் சமூகத்தில் திருமண சடங்குடன் கறாறாக இணைக்கப்பட்டதின் விளைவு, காதலின் உடலியல் அடிப்படை சிதைவிற்கு உள்ளாகி விட்டது, அப்படியென்றால் காதலும், திருமணமும் வேறுவேறா? என்றால், காதலின் முடிவு திருமணமாக இருக்கலாம், ஆனால் காதல் என்பது திருமணத்தை மட்டுமே கொண்டமைந்த ஒரு செயல் அல்ல. காதலுக்கு பால் வேறுபாட்டைக்கூட நாம் முதன்மைப் படுத்த முடியாது, அதாவது ஆண்-பெண் என்கிற இணைமட்டுமே காதலிக்க முடியும் என்பதற்கு இனப்பெருக்கத்திற்கு அப்பால் வேறு எந்தவித விஞ்ஞான அடிப்படைகளும் இல்லை.//


இனப்பெருக்கம் என்பது விஞ்ஞான அடிப்படைதானே? அது போதாதா? ஒரு சில நேரங்களில் வேதிவினைகள் காரணமாக ஓரினப் பாலுறவு காதல்களும், இதர விலங்கினங்கள் மீது காதலும் தோன்றலாமா? அத்தகையை வேதிவினைகள் (மனிதர்கள்) கம்யூனிஸ சமூகத்தில் என்ன செய்யபடுவார்கள்?

//12. காதல் என்பது மனித நாகரீகத்தின் வளர்ச்சியை உருவாக்கிய முக்கிய காரணியாகும். அதனை மதங்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம் காதலை புனிதமானதாகவும், அதன் விளைவு திருமணம் என்பதாகவும், அறவியலின் குறியீட்டு திரளுக்குள் காதலை ஒடுக்கி (ஒழுக்கம் பேனும் எந்திரமாக்கி) ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாட்டை பின்பற்றும் ஒரு செயலாக்கியது. காதலின் உடல் சார்ந்த இருப்பை, மனம் சார்ந்ததாக மாற்றி அமைத்து, காதல் என்பதை மனப்புனித அடிப்படையில் உருவாக்கியதில் காதல் இலக்கியங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. இவ்விலக்கியங்கள் காதல் வேதங்களின் அடிப்படைகளாக மதங்களால் வளர்க்கப்பட்டதின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது இவ்வாறாக.//


ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் பறவைகளும் விலங்கினங்களும் உண்டு. அந்த இணை இறந்துவிட்டால் கூடவே இறந்துவிடும் பறவைகளும் விலங்கினங்களும் உண்டு. அதுவும் மனிதநாகரிகத்தின் வளர்ச்சியின் காரணம்தானா? இவ்வாறு அந்த விலங்கினங்களும் பறவைகளும் இருப்பதுவும் மதங்களின் காரணமாகத்தானா?

//13. ஒருவரது காதல், இருத்தலுடன் இணையும் போது காதலின் அதீத தன்மை உருவாகுகிறது. லைலா-மஜ்னு (அரபியில் லைலா-மஜ்னு என்றால் இரவுப் பைத்தியம் என்று பொருள். சூஃபிகள் இதற்கு தரும் அர்த்தம் வேறுமாதிரியானது.), அனார்-சலீம், ஆண்டனி-கிளியோபாட்ரா, தேவதாஸ்-பார்வதி போன்றவர்களின் அல்லது இவ்வகை கதைமாந்தர்களின் காதல் உன்னதம் பற்றிய புனைவுகள் ஒரு சமூகத்தின் காதல் வேதிவினைகளையே மாற்றும் சக்தியை இவ்வாறே பெருகின்றன. உலக இலக்கியத்தில் உன்னத இலக்கிய அந்தஸ்துகளை பக்தி இலக்கியங்களைவிட காதல் இலக்கியங்களே பெற்றிருப்பதன் விஞ்ஞானமாக இதனை புரிந்து கொள்ளலாம். பக்தி என்பது ஒருவகை புணிதக்காதல்தான். இதில் இறையை பெண் உடலாகவும் மனிதத்தை ஆண் உடலாகவும் உருவகமாக்கி நிகழ்த்தப்படும் ஒரு காதலாகும்.//


பல்வேறு இடங்களில் இறையை ஆணாகவும் பாடும் மனிதனை பெண்ணாகவும் கருதிய பாடல்களும் உண்டே.


//14. அறிவு என்பது பதப்படுத்தப்பட்ட உணர்வு. பல்வேறு நிலைகளில் உருவாகும் உணர்வுகளின் வினைபாடுகள் உருவாக்கும் விளைபொருளாக அறிவு இருக்கிறது. அதனால்தான் சிந்தனையின் முதல்படியாக உணர்வே நமக்கு உருவாகுகிறது. ஒரு புரியாத உணர்ச்சியின் விளைவால் உருவாகும் வேதிப் படிமங்களே பிறிதோரு வினைக்கான வேதிமூலகங்களாக அமைகிறது. இவ்வாறு உருவாகி சேகரிக்கப்பட்ட பல வேதிமூலகங்களின் குறுக்க வினையாகவே அறிவின் வினை உருவாகுகிறது. இவ்வினையில், உணர்வுகளின் வடிவம் சுருக்கப் பட்டும்;, தேவையற்ற வேதிமங்கள் கழிக்கப்பட்டும் பதப்படுத்தப்பட்ட நிலையில் நடைபெறுகிறது. ஒரு வினைக்கான சூத்திரங்களாக அறிவு உருவாக்கப்படுகிறது, பிறிதோரு வேதிம வடிவில். ஆக, உணர்வு அறிவு எல்லாம் ஒருவகை உயிர் வேதிமச் சூத்தரங்களாக எழதப்படக்கூடிய சாத்திய்களைக் கொண்டவை. அப்புறம் கவிதைகளை compund-களாக எழுதவேண்டி வரலாம்.//


ஆகவே அறிவும் ஒரு வேதிவினையே என்ற் சொன்னால், அதனைப்பற்றியும் எந்த அலட்டலும் இல்லாமல், அழித்தொழித்து விடுவதத எதிர்கால கம்யூனிஸம் செய்யுமா? அதனைப்பற்றி கவலை என்னும் வேதிவினை மனிதர்கள் என்னும் வேதிவினை தொகுப்புகளின் உள்ளே வராமல் இருக்க, கம்யூனிஸ தலலவர்கள் என்ற வேதிவினை தொகுப்புகள் என்ன வேதிவினைகளைச் செய்வார்கள்?

//15. உணர்வு என்பது பிரிக்க முடியாதபடி அறிவின் முதல்படியாக உள்ளது. உணர்வுபூர்வமான செயல்கள் ஒரு கட்டத்தில் அறிவாக மலர்கிறது, பிறிதோரு நிலையில், அறிவின் பொருத்தப் பாட்டிற்கு ஒத்துப் போவதில்லை. (இங்கு, அறிவு என்பதை சரியானது-தவறானது என்கிற வாழ்நிலை அர்த்தங்களில் கூறவில்லை.) அதாவது, உணர்வின் வினை ஆற்றல் உயர்மட்ட நிலையை அடைந்தால், அதிலிருந்து உருவாகும் அறிவு என்பது சமூகப் பொருத்தமற்ற செயல்களைக் கூட ஊக்குவிப்பதாகிறது. இந்நிலையிலேயே, உணர்வுபூர்வமான செயல்கள் என்பது சமூக அங்கீகரிப்பை பெறுவதில்லை. பாமர உணர்வு என்பதன் விஞ்ஞானம் இவ் அடிப்படையிலேயே புரிந்து கொள்ளத் தக்கது.

இத்துடன் அறிவு-உணர்வு பற்றிய எடுகோள்கள் முடிகிறது.
- ஜமாலன் (1995)
Posted by ஜமாலன் at 12:35 PM
//


ஆகவே வேதிவினைகள் என்று உடலையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் இந்த அறிவும், சமூகப்பொருத்தமற்ற பல்வேறு செயல்களுக்கு அடித்தளம் ஆகிறது. ஆகவே உணர்வுப்பூர்வமாக பார்க்காமல் அறிவுப்பூர்வமாக பார்த்து (வேதிவினை புரிந்து), எந்த வேதிவினைகள் தங்கவேண்டும் எந்த வேதிவினைகள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று அறிவுப்பூர்வமாக வேதிவினை புரிந்து செயலாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்களா?

16 Comments:

Anonym said...

good questions!
:-)))))

Anonym said...

ஓஹோ,

புரிகிறது.

இந்த லாஜிக்கில் போய்தான், எல்லா மனிதர்களும் சும்மா வேதிவினைதான். இதுக்கெதுக்கு கவலைப்படனும்னு இவர்கள் கொள்கைக்கு ஒத்துவராத மக்களை தீர்த்து கட்டுகிறார்களா?

அப்போ ஸ்டாலின், லெனின், மாவோ, போல்போட் எல்லாம் கம்யூனிஸ கொள்கைப்படிதான் கொலை செய்திருக்கிறார்கள்.

இப்போது புரிகிறது தமிழ்.

நன்றி இந்த விஷயத்தை விளக்கியதற்கு.

கம்யூனிஸ்டுகள் தவறு செய்கிறார்கள், ஆனால் கம்யூனிஸம் நல்லது என்ற வாதத்தை நொறுக்கி தள்ளிவிட்டீர்கள்.

Anonym said...

இதற்காவது ஜமாலனிடமிருந்து வரிக்கு வரி பதில் வருமா?

Anonym said...

ippati naayadi peeyadi atiththaal eppadi varuvaar?

Anonym said...

கம்யூனிஸ்டுகளா,

எல்லாமே வேதிவினைதான்னா எதுக்குங்க ரொம்ப கவலைப்படறமாதிரி நடிக்கிறீங்க?

நடிக்கிறதும் வேதிவினைதான், ஹைட்ரோகுளோரிக் ஆசிடும் வேதிவினைதான், எல்லோரையும் சுட்டு பொசுக்கினாலும் வேதிவினைதான், வேதிவினைக்கெல்லாம் இன்னொரு வேதிவினை கவலைப்பட்டுக்கிட்டு இருக்கமுடியுமான்னு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதானா?

Anonym said...

hilarious!

Thanks Tamil

Anonym said...

Jamalan's arguments are funny to say the least. Human consciousness cannot be reduced to chemicals and neurons. If still tninks that what he has written in 1995 is valid i pity him. Kiekergard once observed that you cannot find consciousness by looking brain through microsope. Jamalan is too confused to understand that there is more to brain and life than compounds and neurons. It is one thing to say that chemicals, neurons, neuro-transmitters and stimulatnts influence our behavior in many ways. It is another to reduce all the complex phenomenon including thought and behavior to action and reaction among chemicals and neurons. Behaviorism failed to explain human behavior. Dont equate Jamalan's views with Marxism. Marx had a better understanding than Jamalan.

said...

நன்பர் தமிழ்மணிக்கு..

கடைசி அனானி எனது பதிவில் பின்னோட்டம் இட்டதால் அதற்கு பதில் எனது பதிவில் உள்ளது. தங்களது கருத்துக்களை ஒரு மாற்றுக்கருத்தாக எனது பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்.

தொடச்சியான தாங்கள் அளித்துவரும் ஊக்கத்திற்கு நன்றி.

அன்புடன்
ஜமாலன்.

said...

ஜமாலன் கூறியது..

அன்புள்ள அனானிக்கு..

//Jamalan's arguments are funny to say the least. Human consciousness cannot be reduced to chemicals and neurons. If still tninks that what he has written in 1995 is valid i pity him. Kiekergard once observed that you cannot find consciousness by looking brain through microsope.//

நன்றி பின்னோட்டத்திற்கும் எனது பரிதாப நிலைக்கான உஙகள் பச்சாதாப பரிவுணர்ச்சிக்கும்.

1995-ல் எழுதப்பட்டவைதான் என்றாலும் அதற்கு பிறகான வளர்ச்சிகள் இத்துறையில் அதிகமாகியே உள்ளன. இவை அன்று நான் அறிந்து கொண்டவரை என்னால் தொகுக்கப்ட்ட விஞ்ஞான எடுகோள்கள் அவ்வளவே. அறிவு மற்றும் உணர்வு குறித்த விஞ்ஞான விளக்கமே இவைகள். பாவ்லோவின் மறிவினைக் கோட்பாட்டிலிருந்து நரம்புகளின் இயக்கம் உடலியங்கியல் ஆகியவற்றின் தொகுப்பே இவை. இவற்றை தத்துவச் சொல்லாடலாக எண்ணி என் அறிவிலி நிலைக்கான உங்கள் பரிதாப உணர்வை இங்கு பின்னோட்டியிருக்கிறீர்கள். அதற்காக எக்ஸிஸ்டென்ஸியத்திலிருந்து இன்றைய பின்நவீன சிந்தனைவரை தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய சிந்தனையாளரான சோரன் கீர்கெகார்டிடிமிருந்து ஒரு குறிப்பை எடுத்து வந்துள்ளீர்கள். பிரக்ஞையை மைக்ராஸகோப் வைத்து மூளையை ஆய்வு செய்து கண்டுபிடித்துவிட முடியாது என்று கீர்கெகார்ட் கூறிவிட்டதால், அதை பின்பற்றியே ஆக வேண்டுமா? தனிமனித தேர்வே முதன்மையானது அதுவே அகநிலையை தீர்மாணிக்கிறது என்று கொண்டாலுமே தேர்விற்கான புற நிலையை எது தீர்மாணிக்கிறது என்பதான தத்துவ கேள்விகள் கீர்கெகார்ட் குறித்து ஒருபுறம் இருக்கிறது.

மனிதப் பிரக்ஞை (Human consciousness) என்கிற கருத்தாக்கம் இன்று உளவியல் துவங்கி இலக்கியம் உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் மனித தன்னிலை (Human Suject) என்கிற கருத்தாக்கத்தால் மாற்றீட செய்யப்பட்டு விட்டது. பிரக்ஞை உள்ளுணர்வு உள்ளொளி பொறி போன்றவை எல்லாம் மின்சாரத்துறை சார்ந்த சொற்களாக மாறி மனிதனைவிட்டு விலகி ஓடிவிட்டது. ஆத்மா சுயம் போன்ற மையங்களும் சிதைந்துவி்ட்ட நிலையில் மனித அறிவு உணர்வு என்பது என்ன? எனகிற கேள்வி மிஞ்சுகிறது. இக்கேள்வியை விஞ்ஞானம் மூலம் புரிந்து கொள்ள முயல்வதே எனது முயற்சி. இது 1995-ல் எழுதப்பட்டாலும் இதனை நீங்கள் விஞ்ஞானரீதியாக மறுத்து பிரக்ஞை என்பதை மனித அமைவுக்குள் விளக்கினால் நானும் புரிந்துகொள்ள ஏதுவாகும். அல்லது கீர்கொகர்டைக்கொண்டு அழகியல் தேர்வு அறவியல் தேர்வு என விளக்கினாலும் சரி. இக்கருதுகோள்கள் வெறும் எடுகோள்கள்தான். இவை முடிந்த முடிவு இல்லை. அதே நேரத்தில் இவற்றை விஞ்ஞானம் விளக்கியுள்ளது. சமீபத்தில் வலி பற்றிய அறிவியல் அதனை அளவிடும் அளவிற்கு முன்னேறியுள்ளது என்கிறது கையேடுவி்ன் பதிவு (http://kaiyedu.blogspot.com/2007/11/blog-post_16.html). ஆக, உணர்வுகளை விஞ்ஞானம் விளக்க நெருங்கிக் கொணடிருப்பதையே இவை காட்டுகிறது.

//Jamalan is too confused to understand that there is more to brain and life than compounds and neurons. It is one thing to say that chemicals, neurons, neuro-transmitters and stimulatnts influence our behavior in many ways. It is another to reduce all the complex phenomenon including thought and behavior to action and reaction among chemicals and neurons. Behaviorism failed to explain human behavior.//

உண்மைதான் மனம் மற்றும் உடல் பற்றிய தத்துவ சிந்தனையில் எனக்கு நிறைய குழுப்பஙகள் இருக்கிறது. ஆனால் நான் எழுதியவற்றில் எனக்கு தெளிவிருக்கிறது. இது அடிப்படையில் ஒரு விஞ்ஞானரீதியான எடுகோள். எடுத்துக்கொண்ட பேசுபொருள் அறிவு மற்றும் உணர்வு. எனது வாதம் சிறுபிள்ளைத்தனம் எனில் உடலியங்கியல் நரம்பியல் போன்ற மனித உடல் குறித்து விஞ்ஞானம் முன்வைத்துள்ள இக்கருத்துக்களை நீங்கள் மறுக்க வேண்டும். அப்படி அவை மறுக்கப்பட்டால் உங்களது புதிய கருத்துக்களை நான் புரிந்து ஏற்க முடியும். புற நிலையின் தாக்கம் புலன்கள் வழி வேதிவினையைத் தூண்டுகிறது. உள்ளே நடக்கும் வேதிவினை இரண்டாவது உயர்நிலையில் (second order process) புறநிலை நோக்கிய செயலாக மாறுகிறது. இதில் எங்கு நான் குறுக்கினேன். Behaviorism எப்படி தோல்வியடைந்துள்ளது என்பதை விளக்கினால் அதையும் புரிந்துகொள்ள ஏதுவாகும். நான நீங்கள் குறிப்பிடும் தத்துவங்களை அதிகம் அறிந்தவன் இல்லை. தாங்கள் இவை தவறாக கருதும்பட்சத்தில், சரியானவற்றை விளக்கினால் மேலதிகமாக தவறை திருத்திக்கொள்ள ஏதுவாகும். மீணடும் இவை எடுகோள்கள்தான் (Hypothesis) முடிந்த முடிவுகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

//Dont equate Jamalan's views with Marxism. Marx had a better understanding than Jamalan. //

அனானி சார். இது உங்களுக்கே நியாயமா? எனது இந்த எடுகோள்களில் நான் மார்க்சியத்தையோ அதனுடைய பார்வையையோ குறிப்பிடவில்லை. தேவையில்லாமல் அதை ஏன் இழுக்கிறீர்கள். மார்க்ஸ் என்னைவிட சிறந்த புரிதல் உள்ளவர் என்பதில் 100 க்கு 1000 சதமானம் உண்மை. அந்த சிந்தனை மலையை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு சிறுவன் நான். இப்படி ஒரு வாசகம் உங்களுக்கு தோன்றியதே தவறு. இந்த நூற்றாண்டு சிந்தனைகளை பாதித்த கீர்கெகார்டு மற்றும் Behaviorism பற்றி எல்லாம் பேசும் நீங்கள் இப்படி எழுதலாமா? உண்மையில் அனானி பின்னோட்டங்களுக்கும் ஆங்கில பின்னோட்டங்களுக்கும் பதில் சொல்வதில்லை என்கிற எனது உறுதியான முடிவை உங்களது மேற்கண்ட இரண்டு வார்த்தைகளால் உடைத்து இப்பதிலை எழுகிறேன். எனது கருத்துக்கள் தவறெனில் அதனை மாற்றிக் கொள்ள தயாராய் இருக்கிறேன். நீங்கள் பிரக்ஞை என்ற சரியான புள்ளியை தொட்டதால்தான் இதனை எழதத்துவங்கினேன்.

ஒருவேளை நீங்கள் தவறான இடத்தில் பின்னோட்டம் இட்டு விட்டீர்களோ. இக்கட்டுரையின் சாரம் என்னவென்றே தெரியாமல் வரிக்கு வரி நண்பர் தமிழ்மணி வழக்கமான கம்யூணிஸக் கட்டுடைத்து ஒரு பதிவு போட்டுள்ளார். எதற்கும் அதையும் ஒருமுறை பார்த்து படித்து வையுங்கள். இணைப்பு கீழே.

http://thamizmani.blogspot.com/2007/11/blog-post_13.html

இக்கட்டுரைக்கு ஒரு கடுமையான விமர்சனக்கட்டுரை நண்பர் தமிழ்மணியால் எழுதப்பட்டுள்ளது. நண்பர்கள் இதனை முடித்தவுடன் அதனையும் பார்த்து வைக்கவும்.

நன்றி.

Sunday, 18 November, 2007
Post a Comment

said...

//இக்கட்டுரையின் சாரம் என்னவென்றே தெரியாமல் வரிக்கு வரி நண்பர் தமிழ்மணி வழக்கமான கம்யூணிஸக் கட்டுடைத்து ஒரு பதிவு போட்டுள்ளார்.//

நான் கட்டுடைத்து பதிவு போடவில்லை. கேள்விதான் கேட்டிருக்கிறேன்.
அதற்கு இல்லை, ஆமாம் என்ற பதில்கள் கூட முடிந்தால், தாங்கள் தரலாம்.


நன்றி

said...

நண்பர் ஜமாலன் பதிவில் எழுதப்பட்டுள்ள சுவாரஸ்யமான கருத்துக்களை இங்கே மறுபதிப்பு செய்கிறேன்.
நன்றி

Anonymous said...
ஜமாலன், நீங்கள் 1995ல் எழுதியதை 2007ல் இடுகிறீர்கள். இடும் முன் கொஞ்சமாவது இணையத்தில் தேடி அறிவியல் வளர்ச்சியில் நீங்கள் 1995ல் இட்டது சரிதானா என்பதை கவனித்திருக்கலாம். பிரக்ஞை, உள்ளொளி போன்றவற்றைக் வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டத்தேவையில்லை. நீங்கள் குறிப்பிடும் ஆய்வுகள் எல்லாவற்றையும் குறுக்குகின்றனவோ இல்லையோ உங்கள் எழுத்தில் குறுக்கம் இருக்கிறது. சிக்கல் என்னவென்றால் காக்னிடிவ் ஸ்டடிஸ் போன்றவற்றில் யோகம், தியானம் போன்றவற்றால் மனித மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுமா என்றெல்லாம் ஆராய்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் வேதியல் செயல்பாடுகளாக, அல்லது வேதியல் செயல்பாடுகளுக்கும், நமது உடலின் பலவேறு அமைப்புகளுக்கும் இடையே ஏற்ப்டும் வினை-எதிர்வினைகளாக குறுக்குவதில்லை.
அறிவியலில் கோட்பாடுகள் மூலம் அனைத்தையும் விளக்க முயற்சி செய்தாலும், மனித மனம், மூளை குறித்த ஆய்வுகளில் முடிவாக இதுதான் என்று பெருங்கொட்பாடு ஒன்றின் மூலம் முளையையும், பிரக்ஞையையும் முற்றாக விளக்கும் நிலை வரவில்லை. இதையாவது நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
வி.எஸ்.ராமச்சந்திரனின் ஆய்வுகளை நீங்கள் இணையத்தில் தேடிக் காண முடியும். இவர் போல் பலர் ஆராய்கிறார்கள். நான் இதில் நிபுணன் அல்ல. அதே சமயம் உங்களுடைய வாதங்களின் போதாமையை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிகேவியரிசமும், பாவ்லாவின் கோட்பாடுகள் இன்று பெருமளவிற்கு நிராகரிக்கப்பட்டுவிட்டன. உங்களிடம் வாதிடுவதில் எனக்கு விருப்பம். நேரம் இல்லை. உங்கள் ஆர்வத்தினை மதித்தே பின்னூட்டமிட்டேன். எதையும் முடிவுகளாக முன்னிறுத்தாதீர்கள், முடிபுகள் அல்லது கருதுகோள்கள்
என்ற அளவில் முன் வைக்க முயலுங்கள். உங்கள் அக்கறையை நான் மதிக்கிறேன். ஆனால் நீங்கள் பலவற்றை முடிந்த முடிவுகளாக முன் வைக்கிறீர்கள். விஷயங்களை பன்முக பரிமாணங்களை, சிக்கல்களை காண மறுக்கிறீர்கள். அனைத்து நோய்களுக்கும், நடத்தைகளுக்கும், குணாம்சங்களுக்கும் ஜீன்களே 100% காரணம்
என்பது போல் எழுதுவதில் உள்ள பிரச்சினைதான் உங்களின் இந்த இடுகையிலும் இருக்கிறது. விரிவஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்ட அனானி.

Monday, 19 November, 2007
ஜமாலன் said...
அன்புள்ள அனானி..

உங்களை தமிழில் காணும்போது மனதில் ஒரு தனி மகிழ்ச்சி எற்படுகிறது. உங்களது அனுகுமுறையின் மொழியும் பொறுப்புணர்வும் அதற்கு ஒரு காரணம். மீண்டும் உங்கள் நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை. தற்சமயம் எனது அலுவலக நேரம் முடிவதால்.. பிறகு எழுதுகிறேன். உங்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். எனது தன்னிலை விளக்கத்தையும் பிறகு தர முயல்கிறேன்.வாய்ப்பிருந்தால் ராமச்சந்திரன் குறித்த லிங்கஸ் மட்டும் தரமுடிந்தால் நல்லது. நன்றி.

Monday, 19 November, 2007

said...

நண்பர் தமிழ்மணிக்கு உங்களுக்கு கட் பேஸ்ட் போன்ற சிரமம் வேண்டாம் என்றே நானே செய்துவிட்டேன். எதற்கும் ஒரு நன்றி பின்னோட்டம் போட்டுவிடுங்கள் நாளைக்கு.

அன்புள்ள அனானிக்கு,

எனது முந்தைய பின்னோட்டத்தில் கூறியபடி ஒரு தன்னிலை விளக்கமாக சிலவற்றை கூறுகிறேன். அலுவலக பணி முடிந்து அவசரமாக கிளம்பியதால் உடனடியாக உங்களுக்கு எழுத வாய்க்கவில்லை. நிற்க. முதலில் உங்கள் பொறுப்பான அனுகுமுறைக்கு நன்றி.

//ஜமாலன், நீங்கள் 1995ல் எழுதியதை 2007ல் இடுகிறீர்கள். இடும் முன் கொஞ்சமாவது இணையத்தில் தேடி அறிவியல் வளர்ச்சியில் நீங்கள் 1995ல் இட்டது சரிதானா என்பதை கவனித்திருக்கலாம். பிரக்ஞை, உள்ளொளி போன்றவற்றைக் வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டத்தேவையில்லை. //

இது குறித்து நான் இணையத்தில் தேடி update செய்யவில்லை என்பது உண்மைதான். காரணம், இதனை எழுதிய பிறகு எத்தனையோ கட்டுரைகள் வெளியாகி உள்ளன. மற்றும் எனது நூலும் 2003-ல் வெளியானது. இருந்தும் இதனை நான் வெளியிடாமல் தற்சமயம் வெளியிடக் காரணம், இதன் மீது எனக்கிருந்த மிக நீண்ட யோசனைகளே காரணம். இங்கு வெளியிட்டதுக்கூட இதனை மேலதிகமாக புரிந்து வளர்த்தெடுக்கவோ அல்லது நிராகரிக்கவோதான். எனக்கு இவற்றை நிராகரிப்பதற்கான நியாயம் இதுவரை கிடைக்கவில்லை. நீங்கள்தான் இதன் மையமான ஒரு சிக்கலை எடுத்து பேசுகிறீர்கள். இவை மார்கசியம் கம்யூணிஸம் போன்ற பெரும் தத்துவங்களுடன் உறவு கொண்டது இல்லை என்பதையும் நீங்கள் சரியாக கண்டடைந்துள்ளீர்கள். இவை பாரிய அரசியலுடன் உறவு கொண்டவை அல்ல. இது பொதுப்புத்தி சார்ந்தவை போகட்டும்.

எனது எடுகோள்களாக குறித்திருக்கும் அடிப்படை குறைந்தபட்சம் 1995 வரையாவது சரியானவை என்று எடுத்துக் கொள்கிறேன். இன்னும்கூட உங்கள் விவாதத்தில் எனக்கு புரியாத அம்சம் நான் கூறியவை அடிப்படை சார்ந்தவை. புலன்களிலிருந்து மூளைக்கான நரம்பியல் கடத்தல் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதேபோல் மூளையின் செயர் எதிர்ச் செயலும் நிரூபிக்கப்பட்டவையே. பிரச்சனை பிரக்ஞை என்பது குறித்துதான். பிரக்ஞைக்கு விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட பிடிபடாத சுயேச்சைத்தன்மை உண்டா? என்பதுதான். (எனது உரையாடல் தத்துவம் சார்ந்ததல்ல.) அப்படியே இருந்தாலும் அதனை ஒரு மனித உடல் எதன் வழியாக உணர்கிறது. மூளைவழியாக உணரப்பட்டால் மூளையின் அனைத்து விஞ்ஞர்ன விதிகளுக்கும் அது கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். இப்படிக்கூறினால் உடனே குறுக்குவதாக நீங்கள் எண்ணக்கூடும். மூளையில்லாமல் பிரக்ஞை உருவாகும் ஒரு புதிய மையத்தை உடலுக்குள் நாம் கண்டடைய வேண்டி வரலாம. அப்படி ஒன்று கண்டடையப்பட்டால்கூட அதுவும் விஞ்ஞான விதியால் கண்டடைந்ததாகவே இருக்கும்.

//நீங்கள் குறிப்பிடும் ஆய்வுகள் எல்லாவற்றையும் குறுக்குகின்றனவோ இல்லையோ உங்கள் எழுத்தில் குறுக்கம் இருக்கிறது. சிக்கல் என்னவென்றால் காக்னிடிவ் ஸ்டடிஸ் போன்றவற்றில் யோகம், தியானம் போன்றவற்றால் மனித மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுமா என்றெல்லாம் ஆராய்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் வேதியல் செயல்பாடுகளாக, அல்லது வேதியல் செயல்பாடுகளுக்கும், நமது உடலின் பலவேறு அமைப்புகளுக்கும் இடையே ஏற்ப்டும் வினை-எதிர்வினைகளாக குறுக்குவதில்லை. //

நீங்கள் குறுக்கம் என்று எதைக் குறிக்கிறீர்கள். ஒன்றை விஞ்ஞான விதிகளால் விளக்குவதே குறுக்கப்படுவதாக கருதுகிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை எனது புரிதல்கூட தவறாக இருக்கலாம். உங்களது கருத்துப்படி யோகம், தியானம் போன்றவற்றால் மனித மூளையின் செயல்பாடுகளி்ல் மாற்றம் ஏற்படுவதாக கொள்வோம் (நிச்சயமாக தியானம், யோகம் போன்றவை மனித மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளன. நீங்கள் கூறும் ஆய்வு உயர் தளத்திலானது என்று கொள்வோம்.) அந்த மாற்றம் சில விஞ்ஞான விதிகளுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். ஒருவேளை அதனை தற்சமயம் விளககமுடியாமல்கூட இருக்கலாம். விஞ்ஞான ஆய்வு என்பதே புரிந்து கொள்வதற்கும் விளக்குவதற்கும்தான். அப்படி விளக்கினால் அதனை குறுக்கம் என்று கூற முடியுமா? நீங்கள் கூறவருவது குறுக்கம் என்பது விளக்க முடியாத தன்மையில் உள்ளவையாக மட்டுமே இருக்க முடியும்.

//அறிவியலில் கோட்பாடுகள் மூலம் அனைத்தையும் விளக்க முயற்சி செய்தாலும், மனித மனம், மூளை குறித்த ஆய்வுகளில் முடிவாக இதுதான் என்று பெருங்கொட்பாடு ஒன்றின் மூலம் முளையையும், பிரக்ஞையையும் முற்றாக விளக்கும் நிலை வரவில்லை. இதையாவது நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். //

இதனை நான் முழுமையாக ஏற்கிறேன். எந்த காலத்திலும் ஒரு பெருங்கோட்பாடு எல்லாவற்றையும் விளக்கும் வண்ணம் அமையும் என்று நம்புவதும் ஒரு தவறான பார்வைதான். மூளை, பிரக்ஞை குறித்த ஆய்வுகள் இன்னும் முடிவெல்லையை அடையவில்லை என்பதும் அது பன்னெடுங்கால தத்தவப் பிரச்சனையாக உள்ள ஒன்றாகும். உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் இதனை எனது எடுகோள்களில் எந்த இடத்திலும் நான் மறுக்கவில்லை என்றே நினைக்கிறேன். பிரச்சனை பிரக்ஞை என்பது என்ன? அது ஒரு மனித உணர்வநிலைதான். வேண்டுமானால் அதை சாதரண நடைமுறை சார்ந்த உணர்வுடன் ஒப்பிடாமல் ஒரு தனிச்சிறப்பான உணர்வு என்று கொள்ளலாம். பிரச்சனை அறிவையும் உணர்வையும் பிரிப்பது எது? அதற்கான விஞ்ஞானம் என்ன? என்பதுதான். புலன் உணர்வுகள் மூளையுடன் கொள்ளும் உறவு என்ன? என்பதுதான். அல்லது பிரக்ஞை என்பது விஞ்ஞானத்தால் பிடிக்க முடியாத விளக்க முடியாத ஒரு நிலை என்று கூற வேண்டி வரும். ஒரு வாதத்திற்காக அது இன்றைய உண்மையாகக்சகூட இருக்கலாம். அதற்காக அது குறித்த ஆய்வுகளோ எடுகோளோ உருவாக்கக் கூடாது என்று கூறமுடியாது அல்லவா?


//வி.எஸ்.ராமச்சந்திரனின் ஆய்வுகளை நீங்கள் இணையத்தில் தேடிக் காண முடியும். இவர் போல் பலர் ஆராய்கிறார்கள். நான் இதில் நிபுணன் அல்ல. அதே சமயம் உங்களுடைய வாதங்களின் போதாமையை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிகேவியரிசமும், பாவ்லாவின் கோட்பாடுகள் இன்று பெருமளவிற்கு நிராகரிக்கப்பட்டுவிட்டன. //

நான் ராமச்சந்திரன் குறித்து படித்ததில்லை. இது தொடர்பாக அவரது ஆய்வுகளின் சுட்டிகளைத் தாருங்கள் தொடாந்து பயணிக்க உதவும். எனது வாதங்கள் போதாமையானவை என்பது உண்மைதான். ஆனால், எனது வாதம் என்று நீங்கள் எதனை புரிந்து கொண்டுள்ளீர்கள். ஏனென்றால் நான் வாதம் என்று எதுவும் இதில் முன் வைக்கவில்லை. மன்னிக்கவும் திரும்பவும் கூறுகிறேன் இது எடுகோள்தான். இவை மறுக்கப்படலாம் அல்லது மறுகட்டமைப்பிற்கு உட்படலாம். விஞ்ஞானம் என்பது அவ்வப்பொழுது மறுக்கப்படுவதுதான். மறுப்பு இல்லாமல் உயர்ந்த ஒரு விதிமுறையை அடைய முடியாது. இவை மறுக்கப்பட்டு இதனிலும் சிறந்த விளக்கங்கள் இருக்குமெனில் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கேதும் மனத்தடையில்லை.

//உங்களிடம் வாதிடுவதில் எனக்கு விருப்பம். நேரம் இல்லை. உங்கள் ஆர்வத்தினை மதித்தே பின்னூட்டமிட்டேன். //

கன்னியமிக்க உங்களது இந்த வரிகளுக்கு நன்றி. நேரம் கிடைக்கம்போது உங்களுடன் உரையாடவும் இத்துறைக்ள குறித்து அறிந்துகொள்ளவும் ஆர்வமாக உள்ளேன். இது குறித்து நீங்கள் அறிவுறுத்தியப்படி மேலதிகமாக இது குறித்து வாசிப்பதன் அவசியத்தை உணர்கிறேன். இது தொடர்ச்சியான தேடல்தான்.

//எதையும் முடிவுகளாக முன்னிறுத்தாதீர்கள், முடிபுகள் அல்லது கருதுகோள்கள்
என்ற அளவில் முன் வைக்க முயலுங்கள். உங்கள் அக்கறையை நான் மதிக்கிறேன். ஆனால் நீங்கள் பலவற்றை முடிந்த முடிவுகளாக முன் வைக்கிறீர்கள். விஷயங்களை பன்முக பரிமாணங்களை, சிக்கல்களை காண மறுக்கிறீர்கள்.//

பொதுவாக முடிவுகள் நீதி வழங்குதல் தீர்ப்புகள் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. கூடுமானவரை எனது புரிதல்களை திறந்த நிலையில் உரையாடலுக்கானதாகத்தான் வைத்துள்ளேன். எடுகோள் என்பது கருதுகோள் என்பதைக் குறிக்கும் மற்றொரு சொல்தான் எனக்கு புரிந்தவரை. எனது எழுத்துக்களை ஒன்றுக்கு பலமுறை படித்து எந்த வகையிலும் வாசகனை நிர்பந்தம் செய்தது ஏற்கும் வண்ணம் அமையக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகத்தான் எழுதுகிறேன். இவற்றில் எதை நீங்கள் முடிந்த முடிவு என்கிறீர்கள் என்று புரியவில்லை. இவை எல்லாமே பன்முக பரிமாணங்களைக் கொண்ட சிக்கல்கள்தான். இவற்றை பிரச்சனைகளாகவும் சிக்கல்களாகவும்தான் முன்வைத்துள்ளேன். ஒருவேளை எனது எழுத்தின் வெளிப்பாட்டு முறையில் ஓங்கி ஒலிக்கும் தன்மை வெளிப்படுகிறதோ எனத் தெரியவில்லை. இருப்பினும் எழுத்துக்களின் வெளிப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. எனது அக்கறையின்மீதான உங்களது மதிப்பீட்டிற்கு மீண்டும் நன்றி.

//அனைத்து நோய்களுக்கும், நடத்தைகளுக்கும், குணாம்சங்களுக்கும் ஜீன்களே 100% காரணம்
என்பது போல் எழுதுவதில் உள்ள பிரச்சினைதான் உங்களின் இந்த இடுகையிலும் இருக்கிறது. விரிவஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்.//

100% இல்லை என்றாலும் அதுவும் ஒரு காரணம் என்பதே விஞ்ஞானம். நான் இந்த எடுகோள்களை எல்லாப்பிரச்சனைகளுக்குமான மையமான காரணமாக முன்வைக்கவில்லை. திரும்பவும் கூறுகிறேன் இவை உணர்வு அறிவாக மாறுவது குறித்த கருதுகோள்கள் அவ்வளவே. எந்தவித பிரச்சனைகளையும் இதில் முன்வைக்கவில்லை. எனது கோணம் தெளிவாகவே உள்ளது. உடல் என்பதன் பெளதீக இருப்பிற்கு பதிலாக பிம்பரீதியான இருத்தலே இன்றைய உடலிருப்பாக உள்ளது. அதற்கு காரணம் உடலின் உணர்வுகள் மற்றும் அறிவு என்கிற காரணிகள் எப்படி இந்த பிம்பங்களினை நோக்கிக் கட்டமைக்கப்படுகிறது என்பதற்கான எடுகோள்கள் (கருதுகோள்கள்) இங்கு முன்வைக்கப்ட்டுள்ளது. அதனால் உடலின் பெளதீக இருப்பு குறித்த பிரச்சனை ம்ட்டுமே இங்கு பிரச்சனைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள சிக்கல்களே பேசப்பட்டுள்ளன. மற்றபடி அறிதல் குறித்த நி்லைப்பாடுகள் விஞ்ஞானரீதியாக பேசுவதின் வழியாக அதன்மீதான கருத்துருவச் சாயல்களை கலைத்துப் போடும் பணியே இந்த எழுத்து. ஆத்மா மற்றும் பிரக்ஞை உயர்ந்தது உடல் புணிதமற்றது என்கிற கருத்துருவத்தை கலைத்துப்போடும் ஒரு விளையாட்டுதான் இந்த எழுத்து. இதனை 100% விஞ்ஞான கருதுகோளாக கருத வேண்டியதில்லை. அப்படிக் கருதிக் கொள்வதிலும் எனக்கு ஆட்சேபனையில்லை.

இறுதியாக, நண்பர் அனானிக்கு உங்களது கருத்துக்களில் உள்ள பொறுப்பும் ஆழமும் இவ்வாறான ஒரு பின்னோட்டத்தை முன்வைக்க காரணமாகிவி்ட்டது. இவ்வளவு நுட்பமாக கருத்துக்களை முன்வைக்கும் நீங்கள் ஏன் அனானியாக வருகிறீர்கள் என்று கேட்க மாட்டேன். யார் சொன்னார் என்பதும் சொல்லப்படும் செய்திக்கு ஒரு அர்த்தபாவத்தை உருவாக்குகிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெயப்பொருள் காண்ப தறிவு.

மெய்ப்பொருள் என்பது சொன்னதை அப்படியே கேடகாமல் ஆராய்ந்து பெறும் அறிவு தானே ஒழிய சிலர் கூறுவதுபோல சொன்னவனைப்பார்க்காதே சொன்னதைப்பார் என்பதல்ல.

நன்றி.

நட்புடன்
ஜமாலன்.

Anonym said...

அன்புள்ள ஜமாலன்,
நான் பழைய அனானி.

தமிழ்மணி பதிந்துள்ள இந்த உங்கள் பதிவு சுவாரஸ்யமாய் இருக்கிறது. உணர்வுகளின் பௌதீக அடிப்படை என்ற ஒரு நிலையிலிருந்து புரிவுக்காக எழுதப் பட்டிருக்கும் பதிவை நீங்கள் விரித்து உணர்வுகளின் பௌதீக வெளிப்பாடு, உணர்வுகளின் கலாசார அடிப்படை, உணர்வுகளின் கலாசார அடிப்படை எப்படி பொருளியல் அடிப்படைக்கு இட்டுச் செல்லமுடியும் என்பதையும் கவனித்து எழுதவேண்டும் என்பது என் ஆவல்.


உதாரணமாக : உணர்வுகளின் வெளிப்பாடு ஏன் எல்ல கலாசாரங்களிலும் ஒன்றாய் இல்லை. பாலியல் வேறுபாடு ஏன் உள்ளது. உதாரணமாக துக்கத்தில் அழுவது பெண்மையின் சிறப்பாகவும், ஆண்களின் பலவீனமாகவும் ஏன் கிட்டத்தட்ட எல்லா கலாசாரங்களிலும் கருதப் படுகிறது? அச்சம் என்ற உணர்வு ஏன் வியர்வை, நடுக்கம் போன்ற பௌதீக வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளன? வெட்கப் படுவது பெண்ணின் இலக்கணமாகவும், தலை நிமிர்த்தியிருப்பது ஆணின் இலக்கணமாகவும் ஏன் கருதப் படுகிறது? அச்சம் எப்படி அழகியலின் அடிப்படையாய் ஹிட்ச்காக் போன்றோரின் படங்களில் உருமாற்றம் பெறுகிறது?

குஷ்பு போன்ற பெண் தமிழ்நாட்டில் அழகியாய்க் கருதப் அப்டுகிறார்? மேல்நாடுகளில் ஒல்லியாய் இருப்பது அழகாகவும், இந்தியாவில் குண்டாய் இருப்பது அழகாகவும் பார்க்கப் படுகிறது. இதற்கு வெளிப்படையான காரணம் ஏழை நாட்டில் வளப்பமாய் இருப்பது, செழுமையைக் குறிப்பதாகவும்,ஆணின் தேர்வில் இனவிருத்திக்கு உகந்ததாகவும் இருக்கலாம். இரண்டு கலாசாரங்களிலுமே ஆண் திடமாய் இருப்பதும், பண வலிமை கொண்டிருப்பதும் எதிர்பார்க்கப் படுகிரது.

காதல் என்ற உணர்வு பௌதீக அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், யார் மீதான காதல் என்பதை கலாசாரம் முடிவு செய்கிறதெனத் தோன்றுகிறது.

பழைய அனானி

said...

ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்ட அனானி,
பழைய அனானி,
ஜமாலன்

ஆகியோருக்கு மறுமொழிகளுக்காக நன்றி

said...

நண்பர் ஜமாலன்,
நீங்கள் சொல்வதுபோல, ஆழமான கருத்துக்களை வைக்கும் அனானிகள் ஏன் அனானிகளாக எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.

தியாகு, ஸ்டாலின், அசுரன், ஆசாத் போன்றோர் "மொள்ளமாறி", திருடன், வெறியன், முட்டாள், பன்றி,நாய், ஆட்டுவது, மஞ்சம் விரிப்பது போன்ற நாகரீகமான வார்த்தைகளை உபயோகிப்பதால், பலர் அனானியாக எழுதுகிறார்கள் என்று கருதுகிறேன்.

Anonym said...

ஏன் அய்யா, ஜமாலனும் அப்படிப்பட்ட நல்ல வார்த்தைகளை போட்டுத்தானே விவாதிக்கிறார்?

அவர் பெயரை விட்டுவிட்டீர்களே