கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் சீனா கண்ட முன்னேற்றம் அளப்பறியது. தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சி என்பது உலகம் இதுவரை காணாத ஒன்று. அது குறித்து ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக சேர்மன் மாவோவின் அருமை, பெருமைகள் குறித்தான சில எண்ணங்கள் இங்கே. நாம் காணும் இன்றைய சீனா மாவோவின் கம்யூனிசக் கொள்கைகளால் உருவான ஒன்றல்ல. அவருக்குப் பின் வந்த டெங்-ஸியோபிங்(Deng Xiaoping )கின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் பலனாக உருவான ஒன்று. சர்வாதிகார மனோபாவமும், முரட்டுப் பிடிவாதமும் கொண்ட மாவோவின் காலத்தில் சீனர்கள் அடைந்த துயரம் மிகக் கொடுமையானது. நான் அறிந்தவரை, இன்றைய சீனர்கள் மாவோ குறித்துப் பேசுவதைத் தவிர்ப்பவர்கள். அதனை ஒரு கொடுங்கனவாய் நினைப்பவர்கள்.
1949-ஆம் வருடம், சீனாவை நெடுங்காலம் ஆண்ட Qing Dynasty-யின் கடைசி அரசனான சிறுவன் Puyi-யைப் பிடித்தவுடன் பல பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருந்த சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்தது. மாஓ-ஸெடாங் (Mao Zedong) - மாவோ - சீனர்களின் தனிப் பெரும் தலைவராக உருவெடுத்தார். 1958-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஒருநாள் திடீரென சீனா உலகின் ஒரு வல்லரசாக வேண்டும் என முடிவெடுத்தார் மாவோ. சாதாரண வல்லரசாக அல்ல. உலகின் மிகப் பெரும் வல்லரசாக. மாவோ சாதாரணத் தலைவரல்லரே. எனவே அவரது அபிலாஷைகளும் மிகப் பெரியவையாக இருந்ததில் ஆச்சரியமில்லை.
தனது கனவை நனவாக்க, "The Great Leap Forward" என இன்று உலகம் அறியும் "மிகப் பெரும் பொருளாதாரத் முன்னேற்றத்" திட்டத்தை அறிமுகப்படுத்தினார் மாவோ. அதனடிப்படையில், நிலக் கட்டுப்பாட்டுக் கமிட்டிகள் - Earth Control Committee - அமைக்கப்பட்டன. விவசாய நிலங்களை அரசுடமையாக்குவது என்பது அதன் முக்கிய நோக்கம். அந்நாட்களில் சீனாவின் பெரும்பான்மையான விவசாய நிலம் அதன் சிறு விவசாயிகளிடம் இருந்தது. நீண்ட காலமாக நடந்த உள்நாட்டுப் போரும், பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த ஏழ்மையும், வறுமையும் அவர்களைச் சூழ்ந்திருந்தன. இருப்பினும் சீனர்கள் உலகை ஆளவேண்டும் என்று விரும்பினார் மாவோ. அந்த இலட்சியத்தை அடைய அவருக்குத் தேவையானது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே என்பதில் உறுதியாய் இருந்தார் அவர். அந்த ஓரிரு ஆண்டுகளில் சீனாவின் உற்பத்தியைப் பெருக்கி உலகின் வல்லரசாக மாற்றுவது என்ற நம்பிக்கையுடனிருந்தார் மாவோ. அதன் ஒரு பகுதியாக, சிறு விவசாயப் பண்ணைகள் நிரம்பிய சீனாவை, தொழிற்சாலைகள் நிரம்பிய நாடாக மாற்றும் ஒரு முயற்சியே Great Leap Forward என்பது. பழம்பெரும் புத்தக் கோவில்களும், பகோடாக்களும் சூழ்ந்திருந்த தனது பெய்ஜிங்கின் Forbidden City வாசஸ்தலத்திலிருந்து மாவோ பகன்றது யாதெனில், "எதிர்வரும் காலங்களில் நான் திரும்பும் திசைகளில் ஆலைகளின் புகை போக்கிகள் மட்டுமே காணப்பட வேண்டும்" என்பதாம்.
அங்ஙனமே ஆகியது. சீனாவின் நகரங்களைச் சுற்றியிருந்த, மங்கோலியப் படையெடுப்புகளையும், தாக்குதல்களையும் தாங்கி நின்ற சுற்றுச் சுவர்கள் இடிக்கப்பட்டு, அங்கே இரும்பு ஆலைகள் நிறுவப்பட்டன. பழமை வாய்ந்த பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அல்லது எரிக்கப்பட்டு அதன் சாம்பலின் மீது புதிய மின்நிலையங்கள் அமைக்கப்பட்டன. சீனக் கலாச்சாரம் 5000 ஆண்டுகள் பழமையான ஒன்று. எனவே, சீனர்களில் சிலர் தங்களின் கலாச்சாரச் சின்னங்களை அழிப்பதை எதிர்த்தார்கள். மாவோ எதிர்த்தவர்களைப் பிடித்து, இம்மாதிரியான கட்டிடங்கள் இடிக்கும் குழுக்களில் கட்டாயப்பணி செய்ய அனுப்பி வைத்தார். அதே நேரம், கிராமப்புறங்களில் இருந்த விவசாய நிலங்களை மாவோ அரசுடமையாக்கியதில் ஏறக்குறைய அரை-பில்லியன் விவசாயிகள் தங்களின் நிலங்களை இழந்தார்கள்.
சரியான திட்டமிடல் எதுவுமின்றி மிகப்பெரும் நீராதாரத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட அணை ஒன்று 1975-ஆம் வருடம் இடிந்ததில் ஏறக்குறைய 2,50,000 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள். கிராமங்களை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு, கம்யூன்கள் எனும் பொதுக் குடியிருப்ப்புகளில் தங்க வைக்கப்பட்டார்கள். கிராமத்தினரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக அவர்களுக்கு எண்கள் வழங்கப்பட்டன. பெயர்களை விடவும் எண்கள் எளிதானவை பாருங்கள்! விவசாய உபகரணங்களும், சமையல் பாத்திரங்களும் புதிதாகத் துவங்கப்பட்ட இரும்பு ஆலைகளுக்கு அணுப்பி வைக்கப்பட்டு உருக்கப்பட்டன. சீனாவின் இரும்பு உற்பத்தி ஒரே ஆண்டில் இரு மடங்காகப் பெருகியது எனப் பெருமிதம் கொண்டார் மாவோ.
அடுத்தபடியாக உணவு தானிய உற்பத்தியில் அவரது கவனம் திரும்பியது. உலகின் வல்லரசுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் தானியங்களை ஏற்றுமதி செய்கின்றன. எனவே சீனாவும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீனாவிலிருக்கும் அத்தனை சிட்டுக் குருவிகளையும் கொல்ல வேண்டும் என்ற முக்கிய உத்தரவும் இடப்பட்டது. காரணம், சிட்டுக் குருவிகள் தானியங்களைத் தின்பவை. அதனால் உற்பத்தி குறைய வாய்ப்புண்டு. எனவே அவை கொல்லப்பட வேண்டும் என்பது மாவோவின் கட்டளை. ஆனால் அச்சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் மனிதகுலம் இதுவரை காணாத உணவுப் பஞ்சத்தை சீனாவிற்குக் கொண்டுவரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சிட்டுக் குருவிகள் இல்லாமையால் வெட்டுக் கிளிகளும், பூச்சிகளும் பெருகி விளைச்சலைத் தின்று தீர்த்தன. தொடர்ந்த மூன்றாண்டுகளில் மொத்த சீனாவும் பஞ்சத்திலும், பட்டினியிலும் பரிதவித்தது. இதன் காரணமாக ஏறக்குறைய 30 மில்லியன் சீனர்கள் உண்ண உணவின்றி இறந்து போனார்கள். அது குறித்து மாவோ கவலையேதும் கொள்ளவில்லை. மாறாக, "மரணங்களால் பலனுண்டு; இறந்தவர்கள் நிலத்திற்கு நல்ல உரமாவார்கள்" என்றார் அவர். சீனர்கள் ஒருபுறம் பட்டினியால் இறந்து கொண்டிருக்க, தொடர்ந்து உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார் மாவோ என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.
இருப்பினும், யாரும் மாவோவை எதிர்த்துப் பேசத் துணியவில்லை. விவசாயிகளும், வேளாண்மை விற்பனர்க்ளும் தன் மீது எரிச்சலில் இருப்பதை மாவோ உணர்ந்தே இருந்தார். 1956-ஆம் வருடம், அரசின் திட்டங்களைப் பிடிக்காதவர்கள் அது குறித்து விமர்சிக்கலாம் என்று அறிவித்தார் மாவோ. அதற்கு "நூறு மலர்களின் செயல்முறை" (Hundred Flowers Campaign) என்று பெயரும் வைத்தார். எதிர்க் கருத்து கொண்டவர்கள் அஞ்சாமல் விமர்சனம் செய்யலாம் என்று ஊக்குவித்தார் மாவோ. அது ஒரு பொறி என்று அறியாமல் அவரை விமர்சித்தவர்கள், அடையாளம் காணப்பட்டு, குறி வைக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து, மாவோ தனது "தூய்மைப்படுத்துதலை" (periodic purging) ஆரம்பித்தார். "ஹ¤னான் மகாணத்தில் மட்டும் 100,000 பேர் அடையாளம் காணப்பட்டு, 10,000 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,000 பேர்கள் கொல்லப்பட்டனர்" என்று அறிவித்தார் மாவோ. அதுபோலவே மற்ற மாகாணங்களிலும் "களையெடுப்பு" நடந்து முடிந்தது.
தனது பதவியை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, 1950-ஆம் வருடம் மட்டும் ஏறக்குறைய 8,00,000 சீனர்களைக் கொன்று குவித்தார் மாவோ. இறுதியில் மாவோவை எதிர்த்துப் பேச ஒருவரும் துணியவில்லை. அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் முதல்பகுதியிலும் தனது எதிரிகளை ஒழிக்கும் எண்ணத்துடன் "கலாச்சாரப் புரட்சி" (Cultural Revolution) எனும் மாபெரும் பைத்தியக்காரத்தனம் மாவோவினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவோவிற்குப் பின் சீனாவை ஆண்ட டெங்-ஸியோபிங் கூட அதிலிருந்து தப்பவில்லை. பீஜிங்கிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் ஜியாங்ஸி மாகாணத்தில் அமைந்த ஒரு ட்ராக்டர் தொழிற்சாலையில் வேலை செய்ய அனுப்பி வைக்கப்பட்டார் டெங்.
மாவோவின் கலாச்சாரப் புரட்சி "நான்கு பழமை"களுக்கு (Four Olds) எதிரானது - பழைய வழக்கங்கள் (Old Customs), பழைய கருத்துகள் (Old Ideas), பழைய பழக்கங்கள் (Old Habits) மற்றும் பழைய கலாச்சாரம் (Old Culture) - என்பவையே அவை. மூலைச் சலவை செய்யப்பட்ட, செம்படையினர் என்று அழைக்கப்பட்ட (Red Guards) பதின்பருவ சிறுவர்களும், இளைஞர்களும் கட்டவிழ்த்து விடப்பட்டார்கள். "Be violent" என்றார் மாவோ அவர்களிடம். போலிஸ்காரர்களும், இராணுவத்தினரும் அவர்களைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அச்சிறுவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும், வலதுசாரிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களும் அவர்களால் கொடுமைப் படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
அதனைத் தடுப்பதற்குப் பதிலாக, "பீகிங்கில் போதுமான வன்முறை இல்லை" என்றார் மாவோ. குறிப்பறிந்து தொடர்ந்த வன்முறையில் ஏறக்குறைய 2000 பேர்கள் பெய்ஜிங்கில் மட்டும் கொல்லப்பட்டனர். பள்ளிகளிலிலிருந்து செம்படையினருக்கு விலக்களித்த மாவோ, அவர்கள் சீனாவின் எந்தவொரு இடத்திற்கும் யாதொரு தடையுமில்லாமல் சென்று வருவதற்கான அனுமதியையும் வழங்கினார். அவர்களைக் கண்டு சீனா முழுமையும் நடுங்கியது. உச்ச கட்டமாக, குவான்ஸி மாகாணத்தில் செம்படையினர் அவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியரைக் கொன்றதுடன், பள்ளி உணவகத்தில் வைத்து அவரது உடலைத் தின்றனர் செம்படைச் சிறுவர்கள்.
"பழைய கலாச்சாரத்தை உடைத்தெறி" என்றார் மாவோ செம்படையினரிடம். சீனாவின் அரும் பெரும் பொக்கிஷங்களாக, 5000 வருடங்கள் தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்பட்டு வந்த அற்புதமான ஓவியங்களும், புத்தகங்களும் எரியூட்டப்பட்டன. இசைக்கருவிகளுடன் பிடிபடுகிற எவரும் கொடுமைப்படுத்தப்பட்டு இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். ஆயிரக்கரக்காண வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்பங்களும், கட்டிடங்களும் நொறுக்கப்பட்டன. சீனா அதுவரை கண்டிராத பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. 1976-ஆம் வருடம் நிகழ்ந்த மாவோவின் மரணம் வரை இக்கொடுமை தொடர்ந்தது.
மாவோவின் ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய 70 மில்லியன் சீனர்கள் மரணமடைந்ததாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டுப் படுகொலைகள் செய்தவர்களான அடால்·ப் ஹிட்லருக்கும், ஜோச·ப் ஸ்டாலினுக்கும் இணையாக ஒப்பிடப் படக்கூடியவர் மாவோ மட்டுமே. இன்றைய சீனம் மாவோவை மறக்க நினைப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
நரேந்திரன் அவர்கள் திண்ணையில் எழுதிய கட்டுரை.
நன்றி நரேந்திரன், திண்ணை(அனுமதியின்றி இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது
Donnerstag, 8. Januar 2009
| [+/-] |
மாவோவை மறத்தலும் இலமே. - நரேந்திரன் |
Montag, 5. Januar 2009
| [+/-] |
ஏழ்மையின் அரசியல்! யார் இந்த மருதையன்? |
நண்பர் அசுரன், கிறிஸ்துவ சேவையாளர் மதர் தெரசா பற்றி மக இகவைச் சேர்ந்த மருதையன் என்பவர் எழுதிய கட்டுரையை தன் பதிவில் பதிந்துள்ளார்.
வினவு பதிவில் இது மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த பதிவும் மறுஒலிபரப்பு செய்யப்படுகிறது.
ஏழ்மையின் அரசியல்!! யார் இந்த அன்னை தெரசா???
//
""பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?''
""என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.''
""என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.''
துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் "அன்னை' தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.//
இந்த வரிகளை எழுதிய தெரசாவுக்காவது ஒரு சுய பரிசோதனை கேள்விகளும், அந்த கேள்விகளில் ஒரு நேர்மையும் இருக்கிறது. அந்த கேள்விகள் தன் வாழ்வின் ஆதார சுருதியாக இருக்கும் சில விஷயங்களை தயவு தாட்சணியமின்றி கேள்வி கேட்கும் தைரியமும் இருக்கிறது. அதனை பாராட்டுவோம்.
//1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த "அவிசுவாசத்தை' எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு "புனிதர்' பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள "அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு' என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.//
இங்கே ஆளும் வர்க்கங்கள் என்று நீங்கள் கூறுவது யாரை? பார்ப்பன பனியா என்று தினந்தோறும் காலையில் எழுந்ததும் லட்சார்ச்சனை செய்வீர்களே அந்த ஆளும் வர்க்கமா? பார்ப்பன பனியா என்று நீங்கள் கூறும் ஆளும் வர்க்கம் இந்த விஷயத்தை தனது ஒவ்வொரு ஊடகத்திலும் பரப்புரை செய்து விளம்பரபடுத்தி கிறிஸ்துவ எதிர்ப்புணர்வை காட்டியிருக்கவேண்டுமே, ஏன் இல்லை?
ஆகவே, உண்மையிலேயே பார்ப்பன பனியா என்று நீங்கள் கூறுபவர்கள் ஆட்சி பீடத்திலும் ஊடக துறையிலும் பரவலாக இருந்திருந்தால், இந்த நிகழ்வு பிரம்மாதமான பிரச்சாரத்தில் கிறிஸ்துவ போலித்தனத்தை அம்பலப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு நடக்கவில்லை. ஆகவே, கேள்வி தற்போதைய ஆட்சி பீடத்திலும் ஊடகத்துறையிலும் ஆட்சி செலுத்துவது யார் என்பதுதானே?
இன்று இந்திய ஊடகத்துறையிலும் ஆட்சி துறையிலும், கல்வி நிறுவனத்திலும் தனது குரல்வளை பிடிப்பில் ஆட்சி செலுத்துவது கம்யூனிஸ்டு, இடதுசாரி, மேற்கு சிந்தனைக்கு தங்களை அடகுவைத்துவிட்ட மெக்காலே பரம்பரை என்று இந்துத்வவாதிகள் கூறுவது உண்மையாக இருக்குமோ? :-)) ஸ்மைலிதான். நான் அவ்வாறு சொல்லவில்லை. நீங்கள் பதில் கூறுங்கள்.
//இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் "நாத்திகர்களின் சதி' என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.
""இக்கடிதங்களின் காரணமாகப் "புனிதர்' பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்'' என்று கூறுகிறது வாடிகன். ""இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்..... தெரசாவிடம் நாம் காணும் "விசுவாசம் நிரம்பிய மன உறுதி' என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்'' என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.//
உண்மையின் பால் கொண்ட காதல் இல்லை என்றாலும், அது உங்களை போன்றோரின் பிரச்சாரங்களுக்கு பயன்படும் என்று தெரிந்தே வெளியிட்ட கத்தோலிக்க திருச்சபையை பாராட்டலாம்தானே?
அவர்களுக்கு உண்மையின் பால் காதல் இல்லை என்று வைத்துக்கொண்டாலும், கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதேனும் உண்மையின் பால் காதல் இருந்திருக்கிறதா என்பதும் ஒரு நல்ல கேள்விதானே? போல்போட் அராஜகங்களையும், ஸ்டாலினின் அராஜகங்களையும் , லெனினின் குரூரங்களையும் பூசி மொழுகி, அவர்கள் நல்லவர்கள் உலகத்தை உய்விக்க பிறந்த புனிதர்கள் என்று கூசாமல் பொய் பேசுகிறீர்களே? அதனை விட கத்தோலிக்க திருச்சபை தனது கொள்கை கோட்டையில் ஒரு ஓட்டை என்று பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படும் என்று தெரிந்தே தெரசாவின் கடிதங்களை வெளியிட்டதை பாராட்டலாம்தானே?
//ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் "தேவன்' இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.
பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த "அற்புதம்' நிகழ்ந்தது.
""இயேசு என்முன் தோன்றினார். "நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?' என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'' என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. "ஒரு உண்மையான விசுவாசி' கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.'
இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் "பொந்துக்குள்' வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் "விசுவாசமின்மை' துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
""பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?'' என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.
தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.//
கம்யூனிஸ கட்சியில் இருக்கும் போலி ஒழுக்க புகை மூட்டம், தவறுகளை வெளிப்படையாக பரிசீலனைக்கு உட்படுத்துவதை தந்திரமாக தவிர்க்கும் கொலைவெறி அரசியல், அம்பலப்படாத தன் சுய ஆளுமையை பாதுகாத்துக்கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழபதியவைத்திருக்கும் கம்யூனிஸ தூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்கு தேவையான விசுவாசமோ அல்லது திரும்பிச் செல்ல துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய விஷச்சூழலில் சிக்கிக்கொண்ட முதிர்ந்த இலைதான் மருதையன் என்றும் கூறலாமா?
//தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், "தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக' அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.
1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.//
உண்மையே!
//ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?
மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட "கடவுள்' தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.
நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட ""கடவுளே உனக்குக் கண்ணில்லையா'' என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் "தேவன் இருக்கிறானா' என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.
""ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்'' என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், ""ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்''. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, ""சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்'' என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.//
என்ன பொருத்தமான உவமை! கிறிஸ்துவ போலித்தனத்துக்கும் கம்யூனிஸ போலித்தனத்துக்கும் எவ்வளவு ஒற்றுமை! ஏழைகளை தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதில்தான் இவர்களுக்குள் என்ன அழகான ஒற்றுமை! தங்கள் வாழ்க்கையையும் உயிரையும் கம்யூனிஸ கட்சிக்கு பலிகொடுப்பவர்களை, மக்களை உயிர்த்தியாகம் செய்ய வைக்க பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொண்ட மாவோ, தனது உடல் நலத்துக்கு எவ்வாறு அமெரிக்க மருத்துவ பயிற்சி பெற்ற டாக்டர்களை அழைத்து சிகிச்சை செய்துகொண்டார் என்று படிக்கும்போது இதே போலித்தனத்தை உணர்ந்தீர்களா? எவ்வாறு சேர்மன் மாவோவுக்காக பல்லாயிரம் கன்னிகள் பலியிடப்பட்டனர் என்று படிக்கும்போது என்ன உணர்ந்தீர்கள்?
http://www.amazon.com/Private-Life-Chairman-Mao-traditional/dp/957131434X
//தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.//
நான் படித்த செய்திதான் என்றாலும், தற்போதுதான் ஒரு கம்யூனிஸ்ட் எழுதி நான் படிக்கிறேன். நமது இந்திய தமிழ் ஊடகங்களில் இப்படிப்பட்ட செய்திகள் கவனமாக மறைக்கப்படுவது யாருடைய ஆளும் வர்க்க சூழ்ச்சி என்று எழுதுவீர்களா?
//இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.
தெரசாவை அம்பலப்படுத்தும் "நரகத்தின் தேவதை' என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: ""தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும் அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட'' என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.
ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை ""அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்'' என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ""இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்'' என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம் அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. ""பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்'' என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, ""கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்'' என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது ""மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது'' என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.
அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை. அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.//
உண்மை. எவ்வாறு மேற்குலகின் ஏஜண்டாக தெரசாவும் கத்தோலிக்க திருச்சபையும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ என் ஜிஓக்களும் செயல்படுகின்றனவோ, அதே போல சீனாவின் ரஷியாவின் ஏஜண்டாக இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகளும் அவர்களின் என் ஜி ஓக்களும் செயல்படுகின்றன என்பதையும் நேரடியாக எழுதியுள்ளீர்களா? படிக்க விரும்புகிறேன்.
என்னைப்பொருத்தமட்டில், எவ்வாறு தெரசாவின் புனித பிம்பம் மேற்குலகால் இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறதோ அதே போல, ரஷியர்களாலும் சீனர்களாலும், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், அறிவுஜீவிகள் புனித பிம்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய கருத்தாக்க நாணயத்தின் இரண்டு பக்கங்களே இவர்கள்.
ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.
ஆனால், ரஷிய, சீன உலகு இந்தியாவில் உருவாக்கும் புனித பிம்பங்கள், நக்ஸலைட்டுகள் உருவாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானவர் கொல்லப்படுவதும், வன்முறையும், ரயில் தண்டவாள உடைப்பும்தானே கிடைக்கிறது.
இதனை பொறுத்தமட்டில், மேற்குலகின் புனித பிம்பங்கள் ஆபத்தானவையாக இருந்தாலும், அவை கம்யூனிஸ புனித பிம்பங்கள் அளவு தீயவை அல்ல என்று சொல்லலாமா?
//தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான "திருச்சபை' உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.
தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.//
தன்னுடைய நம்பிக்கையின்மையை வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டிருந்தாலும், நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் தனது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்த தயங்கவில்லை. அது ஓரளவுக்கு நேர்மையானதே. ஆனால், 18ஆம் நூற்றாண்டு பழங்கஞ்சியே நிரந்தர அறிவியல் கஞ்சி என்று தனது நம்பிக்கையின்மை வெளியிடப்படக்கூட வாய்ப்பில்லாத அளவுக்கு தன்னைத்தானே மூளைச்சலவை செய்துகொண்டு போஸ்ட்-லோபாட்டமி மனிதர்களாக உலவும் கம்யூனிஸ்டுகளை என்ன சொல்வது?
//ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.//
ஏழைகளை நேசிக்கவேண்டாம். அய்யா தயவு செய்து ஏழைகளை வைத்து அரசியல் பண்ணுவதை நிறுத்துங்கள். உங்கள் அரசியல் ஏழ்மை மீதுதான் வரும் என்பதால், ஏழ்மையை வளர்ப்பதில் ஈடுபடுவதில் கிறிஸ்துவ பிரச்சாரகர்களுக்கும் கம்யூனிஸ பிரச்சாரகர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. நீங்களே சொன்னது போல மாவோயிஸ்டுகள் பொதுமக்கள் மத்தியிலிருந்து போலீஸை தாக்கி, போலீஸ் திரும்பித்தாக்கும்போது ஏராளமான பொதுமக்களும் ஏழைகளும் பாதிக்கப்படுவதை வைத்து தங்களுக்கு கூட்டம் சேரும் என்று அரசியல் நடத்துவதற்கும், ஏழ்மை, சுனாமி போன்ற இழிவுகள் நடப்பதை வைத்து அதன் மூலம் கிறிஸ்துவ அறுவடை செய்யும் கூட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?
//கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், ""விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்'' என்கிறார் ஹிட்சென்ஸ்.
தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் 1946இல் இருந்தது போல "திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்' தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.
எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை.
· மருதையன்
புதிய கலாச்சாரம் //
எவ்வாறு தான் உருவாக்கிக்கொண்ட ஒரு மாயக்காட்சியில் தெரசா சிக்கிக்கொண்டு, பிறகு நிர்வாகம் விருதுகள் நன்கொடை, என்ற அமைப்புக்குள் சிக்கொண்டுவிட்டாரோ அதே போல, முப்பதாண்டு கட்சிப்பணியில் தனது வாழ்க்கையை இழந்துவிட்டு அந்த கொள்கை குப்பை என்றாலும் செலவழித்த வாழ்க்கையை நியாயப்படுத்த வேண்டி சிக்கிக்கொண்ட நீங்களும் பரிதாபத்துக்குரியவரே!
Abonnieren
Posts (Atom)


